“கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

2D Entertainment நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் , கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா ,யுவராணி , தீபா , ஜீவிதா , இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை D.இமான் , ஒளிப்பதிவு R.வேல்ராஜ் , கலை வீரசமர் , இணை தயாரிப்பு ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தில் கார்த்தி மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி Engineer , Doctor என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் IT வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். “ கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் உறவு பற்றியும் இயக்குநர் பாண்டிராஜ் ஆழமாக பேசியுள்ளார். படத்தின் கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகுநாளாச்சு என்று பாராட்டியுள்ளார். வெயில் , பனி , மழையென எதையும் பொருட்படுத்தாமல் கார்த்தி படத்தில் கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளார். சூர்யாவின் தம்பி என்பதால் படத்துக்கு கடைக்குட்டிசிங்கம் என பெயர் வைத்துள்ளார்கள் என்ற எல்லோரும் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாக வருவதால் தான் இந்த டைட்டிலாம். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.